
ரோபோ கதை இதுதான் - நம்புங்கோ !

ரோபோ படத்தின் என்ன என ஆளாளுக்கு கிளி ஜோசியம் கூறி வருகின்ற நிலையில், இயந்திரன் படத்தின் உண்மையான கதை என்ன ? ஷங்கரின் மனதில் இயந்திரன் படக்கரு தோன்றியது எப்படி ? இதை இந்த பதிவின் இறுதியில் பார்க்கலாம் !
ஐசக் அசிமோவ் என்ற பிரபல (நம்மூர் சுஜாதா போல) அறிவியல் விஞ்ஞான புனைகதை எழுத்தாளர் 'I, Robot' என்ற பெயரில் ஒரு நாவல் எழுதினார். பல நாவல்கள் எழுதியிருந்தாலும் ஐசக் அசிமோவ் பிரபலமானது இந்த நாவல் மூலம்தான்.
'I, Robot' நாவலின் கதை 2035 ம் வருடங்களில் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் ரோபோ எனப்படும் இயந்திர மனிதனின் பங்கு பெருமளவில் இருக்கும் என்பதைப்பற்றியது. அப்படிப்பட்ட சூழலில் மனிதனுக்கு இயந்திர மனிதனின் பங்கு என்ன என்பது பற்றி ஆராய்ந்து வரும் ஒரு இயந்திர உளவியலாளர் (Robo Psychologist) திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறார். இது பற்றி விசாரணை மேற்கொள்ளும் காவல் துறை அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிறது. மேல் விசாரணைக்கு நியமிக்கப்படும் காவல் அதிகாரி விஞ்ஞானியின் மரணம் தற்கொலை அல்ல என்று கண்டறிகிறார். விஞ்ஞானி கொலைக்கான காரணம் பற்றி ஆராயும் போது அவருக்கு, விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டு, உளவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான ரோபோக்கள் மீது சந்தேகம் வருகிறது. இறுதியில் விஞ்ஞானி ரோபோக்களால் கொலை செய்யப்பட்டிருப்பதையும், சிந்திக்கும் திறன் பெற்ற ரோபோக்கள் மனித குலத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து மனிதர்களை அடிமைகளாக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் கண்டறிந்து அந்த சதித்திட்டத்தை முறியடிக்கிறார்.
ஐசக் அசிமோவ் எழுதிய இந்த கதையை பிரபல ஆங்கில படத்தயாரிப்பு நிறுவனமான Twentieth Century Fox நிறுவனம் 2004 ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இப்படத்தில் ஜேம்ஸ் குரோம்வெல் விஞ்ஞானியாகவும், வில் ஸ்மித் துப்பறியும் காவல் அதிகாரியாகவும், ப்ரிட்கேட் மொய்னயன் துணை பெண் காவல் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். அலெக்ஸ் ப்றேயாஸ் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
சரி, நம்மூர் கதைக்கு வருவோம் ! ரோபோ பட கரு பற்றிய எண்ணம் ஷங்கருக்குள் புகுந்தது எழுத்தாளர் சுஜாதா முலமாக. அந்நியன் படத்திற்காக சுஜாதாவுடன் பணியாற்றிய போது, அந்நியன் போல எதிகாலத்தில் மனிதர்களுக்கு எதிரிகளாக yaar யாரெல்லாம் இருப்பார்கள் எனபது பற்றிய பேச்சு ஷங்கருக்கும் சுஜாதாவிற்கும் இடையே நடந்தது. அப்போதுதான் சுஜாதா ஐசக் அசிமோவ் எழுதிய 'I, Robot' நாவல் பற்றி கூறியிருக்கிறார். அதில் ஆர்வமான ஷங்கர் அந்த நாவலை வாங்கி படிக்க ஆரம்பித்த போதே அவருக்குள் ரோபோ படத்திற்கான முதல் விதை விழுந்தது. அதன் பிறகு வில் ஸ்மித் நடித்த 'I, Robot' படத்தையும் திரும்ப திரும்ப பார்த்துள்ளார். (ஷங்கரின் இணையதளமான http://www.directorshankar.com/- இன் வரவேற்பு பக்கத்தின் முகப்பு 20th Century Fox நிறுவனத்தின் லோகோவை போலவே அனிமேஷன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது)
பிறகு, அஜித் அல்லது கமலை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்ட ஷங்கர், சிவாஜியின் வெற்றிக்குப்பிறகு, சுல்தான் த வாரியர் என்ற படத்தில் ரஜினி ஆர்வம் காட்டியதும், ரோபோ கதையை அவரிடம் கூறி இதுவும் பாண்டஸி டைப் கதைதான், என்று கூறி சம்மதம் ரஜினியிடம் சம்மதம் பெற்றார். அதன் பிறகு ரஜினிக்கேற்றபடி கதையில் மாற்றங்களை செய்து, 'I, Robot' படத்தை தமிழ் உலகிற்கு ஏற்றபடியும் ரஜினிக்கு ஏற்றபடியும் மாற்றி திரைக்கதை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.
இந்த படத்தில் ரஜினி துப்பறியும் காவல் அதிகாரியாகவும், ஐஸ்வர்யா பச்சன் துணை பெண் காவல் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஷங்கரின் இயக்கத்தில் வெளிவரும் பத்தாவது படமான 'இயந்திரன்' சிறுவர்களை கவரும் விதத்தில் கிராபிக்ஸ் வித்தைகளுடன் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாகவும், கதைக்கரு மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
'I, Robot' படத்தின் சில முக்கிய காட்சிகள் உங்களுக்காக ! மேலும் பார்க்க... www.youtube.com போங்க.உண்மையில் 'I, Robot' ஒரு சிறப்பான படம், முடிஞ்சா பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க.

No comments:
Post a Comment